
இப்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை என்றும், அப்படியே எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் தனது ரசிகர் மன்றங்களுடன் கலந்தாலோசித்தே முடிவெடுப்பேன் என்றும் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும், கடந்த வாரம் ராகுல் காந்தி சென்னை வந்திருந்த போது அவரது முன்னிலையில் ரசிகர்களுடன் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் அவர் இணைவார் என்றும் செய்திகள் வெளிவந்தன.
கடந்த மாதம் டெல்லியில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அதுபோன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கின.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:
கடந்த சில நாட்களாக என்னைப்பற்றி பல்வேறு செய்திகள் வந்தன. நேற்று மாலைப் பத்திரிகை ஒன்றில் நான் இன்று உங்களை சந்திக்கப் போகிறேன் என்று அறிவித்ததை, அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக செய்தி வந்தது. அந்த அளவு பெரிய சீன்கள் என்னிடம் இல்லை. முன்பே வேட்டைக்காரன் படப்பிடிப்பையொட்டி நிருபர்களை சந்திக்க நினைத்தேன். ராஜசேகர ரெட்டி மறைவால் அது நடக்கவில்லை.
நான் இப்படி செய்யப்போகிறேன் அப்படி செய்யப் போகிறேன் என்றெல்லாம் வந்த செய்திகளை பார்த்து தனியாக உட்கார்ந்து யோசித்தேன். அது மாதிரி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் ஆலோசித்தேன்.
ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இச்செய்திகளால் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டது. அதை தெளிவுபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த செய்தியாளர் சந்திப்பு..
தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் மக்கள் இயக்கம் ஆரம்பித்தேன். கம்ப்யூட்டர் மையங்கள் திறந்தேன். புதுக்கோட்டை, புதுச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன்.
அப்போதுதான் திடீரென்று ராகுல்ஜியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் நல விரும்பி ஒருவர் மூலம் என்னை சந்திக்க அழைத்தார். அதை எற்று எனது தந்தையும் நானும் டெல்லி சென்றோம். நன்றாக உபசரித்து வரவேற்றார். அது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.
இந்திய அளவில் ராகுலின் பணிகள் பாராட்டும்படி உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு திறமையாக பணியாற்றினார். அவர் என்னிடம் பேசிய விதமும் வரவேற்பு அளித்த பாங்கும் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு மணி நேரம் பேசினோம். நிறைய விஷயங்கள் விவாதித்தோம். நான் நடிக்கும் சினிமாக்கள் பற்றி கேட்டார். மக்கள் இயக்கம் பற்றியும் விவாதித்தார்.
நான் ராகுலைச் சந்தித்ததன் மூலம் ஏதோ முடிவு எடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் எது செய்தாலும் ரசிகர்கள், பொதுமக்கள் கருத்துக்களை அறிந்துதான் செய்வேன். எனக்கு கடவுள் கொடுத்த பரிசு ரசிகர்கள்தான். அவர்களை நல்ல பாதையில் அழைத்து செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
இப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. யாருடனும் சேரவில்லை. இப்போது நடக்காவிட்டாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.
தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்றால் கண்டிப்பாக நான் எதிர் காலத்தில் அவர்களுக்காக பாடுபட தயாராவேன்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.
எதிர்காலத்தில் உறுதியாக அரசியலுக்கு வருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாய்ப்பு இருக்கலாம் என்று அவர் பதிலளித்தார்.
தாம் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் தனிக்கட்சி ஆக மாறலாம் என்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.
எப்படி காங்கிரஸ் கட்சி இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதோ, அதேபோல் தாமும் இளைஞர்களைக் கருத்திக் கொண்டு செயல்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெறுவதாகவும், முதல் அமைச்சர் கருணாநிதி வயதானாலும் ஒரு இளைஞரைப் போன்று செயல்பட்டு தமிழகத்திற்கு நன்மை செய்து வருவதாகவும் விஜய் பாராட்டு தெரிவித்தார்.
அண்மையில் தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ரஜினி, விஜய் போன்றோர் காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார்.
இதற்கு ஏற்கனவே ரஜினியும் பதிலளித்து விட்டார். அவரும் இப்போதைக்கு அரசியல் எண்ணம் இல்லை என்று கூறியது நினைவிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக